திங்கள், ஜூலை 22, 2013

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் , வையகம் எப்படி இயங்கும்

2014  பொதுத் தேர்தல் ஒரு தர்ம யுத்தமாம்.

ஆட்சி பீடம் என்றாலே தர்ம யுத்தம் தான்.

என்றுதான் இந்த யுத்தம் பொருளற்று நடந்தது.

நான் தொண்டன். நாட்டுக்குப் பாடுபடுவேன்.

நேர்மையானவன் ;உண்மையானவன். 

கையில் காசு இல்லை;கடவுள் பக்தி உண்டு;

உண்மைத்தொண்டன்  நான்  வாக்களிக்கின்றேன்.

ஊழலற்ற ஆட்சி ;கையூட்டு இல்லா ஆட்சி,

வாக்களிக்கிறேன்; வாக்களியுங்கள்;

வாக்கு  கிடைக்குமா?இல்லாளை இல்லாளும் வேண்டாள்.

வாக்கு கிடைக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது;


நானே செய்த  தவறு,நண்பர்களுக்காக  செய்த  தவறு,

உற்றார் உறவினருக்காக செய்த தவறு;

தெரிந்த அறிந்த புரிந்த தவறு;தெரியாத அறியாத  தவறு;

செய்த தவறை மற்றவர்கள் எடுத்து இயம்பினாலும் 

ஏற்க இயலா   தவறு; கண் செய்த தவறு,

எண்ணங்களால்  தவறு; சிந்தனைத்தவறு,

பேராசைப்படும் தவறு,கோபத்தால் வந்த தவறு,

ஆணவத்தால் செய்த தவறு,பெரியோர்களை நிந்தித்த தவறு,

ஆசிரியர் சொல் கேட்காத் தவறு,கோயிலுக்கு சென்று 

கோபுர தரிசனம் கண்டு இதுதான் கோடிப்புண்ணியமா

என்று பரிகசித்த தவறு,பரிகசித்தோருடன் சேர்ந்து 

ரசித்த தவறு,இளமைத்தவறு, உளவியல் தவறு,

தவறுகள் தான் எத்தனை ?எத்தனை?

தவறு செய்யா மனிதர்கள் தரணியில் உண்டா ?என்ன?

இறைவனவதாரம் எடுத்த ராமனிடமும் தவறு;

கிருஷ்ணனிடமும் தவறு;சிவனிடமும் தவறு;

தவறான மனிதர்களைப்படைத்த பிரம்மனிடமும் தவறு;

அனைவருக்கும் அறிவைத் தராத கலைமகள்.

அனைவருக்கும் செல்வம் தரா அலைமகள்,

அனைவருக்கும் வீரம் தரா மலைமகள் 

என அவரவர்கள் தவறை மறைக்க தவறு செய்யும் தவறு 

என  பூ உலகில் தவறுகளே காணுகின்றோம்.

உண்மை,நேர்மை,என்ற ஒன்றே இருந்தால் ,

வையகம் எப்படி இயங்கும் ?இப்படி எண்ணும் தவறு.